`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்க நிறுவனர் ஒருவருக்கு எதிராக இருக்கும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க, அந்த தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டார் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி.
லஞ்சம் கொடுத்தால் மேலும் சில சலுகைகளை வழங்குவதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தொழிலதிபர் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிந்தன் ரகுவம்சி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, தொழிலதிபர் சிபிஐ-யிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் பொறிவைத்து சிந்தன் ரகுவம்சியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவம்சியை புவனேஸ்வரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
சிந்தன் ரகுவம்சி குறைந்தது ஒன்பது தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடவில்லை.