கேரள கப்பல் விபத்து: 22 தமிழக கடலோர கிராமங்கள் பாதிப்பு!
கேரள கப்பல் விபத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 22 கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரள கடல்பகுதியில் கடந்த மே 24 ஆம் தேதி, லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அம்மாநிலத்தின் கடல்பகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 நாள்களுக்கும் மேலாக, அந்தக் கப்பலில் இருந்த சரக்குப் பெட்டிகள் (கண்டெய்னர்), மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருகள் மற்றும் துகள்கள், கிளியூர் மற்றும் கல்குளம் ஆகிய கிராமங்களில் கரை ஒதுங்கிய வண்ணமுள்ளன.
அந்தக் கப்பலில் ஆபத்தான பொருள்கள் நிரம்பிய சுமார் 13 கன்டெய்னர்கள் உள்பட மொத்தம் 640 சரக்குப் பெட்டிகள் இருந்தன. மேலும், 84.44 மெட்ரிக் டன் அளவிலான டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் அளவிலான உலை எண்ணெய் ஆகியவையும் அதில் சேமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இதன் விளைவாக கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்மாவட்டத்தில், கிளியூர் தாலுக்காவில் 16 கடலோர கிராமங்களும், கல்குளம் தாலுக்காவில் 13 கிராமங்களும் மற்றும் அகத்தீஸ்வரம் தாலுக்காவில் 13 கிராமங்களும் உள்ளன.
இந்த விபத்தினால், கிளியூரின் 12 கிராமங்கள் மற்றும் கல்குளத்தின் 10 கிராமங்களில், அந்தக் கப்பலின் குப்பைகள் கரை ஒதுங்கி வருகின்றன.
இதில், நீரோடி, இரவிபுத்தன்துறை, இனயம், சின்னதுறை, தூத்தூர், பெரியவிளை, சின்னவிளை, கடியப்பட்டிணம், குறும்பணை, கொடிமுணை, சைமன் காலனி மற்றும் மண்டைக்காடுபுதூர் ஆகிய கிராமங்களில் பாதிப்புகள் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வன்னியக்குடி கிராமத்தின் கடல்கரையில் சரக்குப் பெட்டியும், வலவிளை கிராமத்தில் மரக்கட்டைகளும் கரை ஒதுங்கியுள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி கடலோர கிராமங்களில், கரை ஒதுங்கும் அந்தக் கப்பலின் குப்பைகளை அகற்றும் பணியில், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!