பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி
பாடகி தீயையும் தன்னையும் ஒப்பிடக்கூடாது என சின்மயி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பாடகர்கள் பாடினர்.
அதில், பாடகி சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக, சின்மயி அப்பாடலைப் பாடிய விதத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
ஆனால், திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தியில் சின்மயியும் தமிழ் மொழியில் பாடகி தீயும் பாடியிருந்தனர். தீ பாடியது ரசிகர்களிடம் போதிய கவனத்தைப் பெறவில்லை. இதனால், தமிழிலும் சின்மயியைப் பாட வையுங்கள் எனப் படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற சின்மயி, “தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். ஆனால், அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. தீக்கு தனித்துவமான குரல் வளம் உண்டு. தமிழில் முத்த மழை பாடலுக்கு அவரைப் பயன்படுத்தியற்கு அப்பாடலுக்கு ஒரு வித்தியாசத்தைக் கொடுப்பதற்காகவும் இருக்கலாம்.
என்னுடைய 20-வது வயதில் முத்த மழையை இந்தளவிற்குப் பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் காரணம். இளம் திறமையாளரான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம். எங்களுக்குள் எந்தப் போட்டிகளும் இல்லை. பாடகி தீயையும் என்னையும் ஒப்பிடக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?