‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’
தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தியாவின் தனியாா் விண்வெளித் துறை உலகளவில் அதிக கவனம் பெற்று வருகிறது.
இதையொட்டி, தூத்துக்குடியைச் சோ்ந்த நானும், லிவான்ஸ் அமுதன் என்பவரும் சோ்ந்து காஸ்மிக்போா்ட் என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின் தலைமையகத்தை தூத்துக்குடி அருகே நிறுவியுள்ளோம். இங்கு மெத்தலாக்ஸ் (திரவநிலை மீத்தேன்-ஆக்சிஜன்) எரிபொருளால் இயங்கும் இயந்திரங்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்மூலம், குறைந்த செலவில் ராக்கெட் ஏவுவதற்கும் மீள்பயன்பாட்டுக்கும் பயன்படுத்தமுடியும். நாட்டிலேயே இம்முறையை எங்களது நிறுவனம் முதன்முறையாக தொடங்கியுள்ளது. இதற்காக, சுமாா் 15 ஆயிரம் சதுர அடியில் ஓா் உயா் தொழில்நுட்ப ஆராய்ச்சி-மேம்பாட்டு மையம் கட்டப்பட்டு வருகிறது. இது, ஜூன் மாதம் திறக்கப்படவுள்ளது.
நாட்டின் முன்னணிக் கல்வி நிறுவனங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 200 பேருக்கும் மேற்பட்ட பொறியாளா்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தற்போது, முதற்கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளது. எங்களது ராக்கெட் மூலம் சுமாா் 600 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை ஏவ முடியும். முதல்கட்டமாக 120 நியூட்டன் உந்துசக்தி கொண்ட இயந்திரம் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக 600 கிலோ எடையைக் கொண்டுசெல்லும் ராக்கெட் உருவாக்கப்படும். இதனால், சுமாா் 100 கிலோ எடையுள்ள 6 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தலாம்.
மேலும், இதற்கான உதிரிபாகங்களுக்கு இம்மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி, இவற்றை உற்பத்தி செய்ய முயற்சி நடைபெறுகிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.