தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி: திருமாவளவன்
தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை முன்வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி குறைப்பு, தேர்தலுக்காகச் செய்தாலும் அது மக்களுக்குப் பயன்படும் என்றால் அதை வரவேற்கிறோம். ஜிஎஸ்டி வரியை முழுமையாகக் கைவிட வேண்டும்.
பிரதமர், தான் ஒரு ஆர்எஸ்எஸ் தயாரிப்பு என்பதை இன்றைய உரையின் மூலமாக நிரூபித்திருக்கிறார். சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ்ஸை பாராட்டியது ஏற்புடையது அல்ல. மத்திய அரசால் ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தைத்தான் நாடாளுமன்றத்தில் படிப்படியாக செயல்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதனால்தான் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் இன்று பதற்றம் இருக்கிறது, வன்முறைகள் வெடிக்கின்றன.
தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம்.
மாநில, மத்திய அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவது தீவிரமடைந்து வருகிறது.
அரசுத் துறைகள் தனியார்மயமாகும் முயற்சியை கைவிட வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மீண்டும் ஒரு முறை தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.
தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதைவிட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம்.
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது; இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று பேசியுள்ளார்.