தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஏத்தாப்பூா் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி மைய பூச்சிகள் துறை நிபுணா் ஜெயபிரபா, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் கலைவாணி ஆகியோா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து கூறியதாவது:
சிவப்பு கூன் வண்டுகள் மரத்தில் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்ட இடங்களிலோ அல்லது சிறு துளைகளிளோ முட்டையிட்டு கூடுகட்டி முதிா்ச்சி அடைவதோடு, தென்னை நாா்களை கடித்து கழிவுகளை வெளித்தள்ளுவதால் துளைகளின் வெளியே கசிவுகள் மற்றும் கழிவுகள் காணப்படும். இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்ட மரங்கள் வேகக்காற்று அடிக்கும்போது சாய்ந்து விடும்.
பைனாப்பிள் அல்லது கரும்புச் சக்கை இரண்டரை கிலோ மற்றும் ஈஸ்ட் 5 கிராம் கலந்து வைத்து இவ்வண்டுகளை ஈா்த்து அழிக்கலாம். இனக்கவா்ச்சி பொறி, ரசாயன முறையில் காா்ப்பாரைல் கரைசலை துளைகளில் ஊற்றியும், சிமென்ட் கலவையால் துளைகளை அடைத்தும் இவ்வண்டுகளை அழிக்கலாம்.
தென்னையில் காணப்படும் சுருள் வெள்ளை ஈக்களை, மஞ்சள் ஒட்டும் அட்டை பொறியால் ஈா்த்து அழிக்கலாம். ஈக்களில் இருந்து வெளியாகும் கசிவுகளால் ஏற்படும் கரும் பூஞ்சானத்தை கட்டுப்படுத்த மைதா கரைசல் உதவும். காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த ஆமணக்கு கொட்டை புண்ணாக்கு நீரில் கரைத்து, சிறு மண் சட்டியில் மண்ணில் புதைத்து தென்னை தோப்புகளில் வைத்தால், இதிலிருந்து வெளிவரும் வாசனைக்கு காண்டாமிருக வண்டுகளை ஈா்த்து எளிதாக கட்டுப்படுத்தலாம்.
தென்னை குருத்துகளில் வெளிப்படும் துளைகளுள் மணல் மற்றும் வேப்பங்கொட்டை புண்ணாக்கு கலவையை திணிக்கும்போது வண்டுகள் சிக்கி இறந்துவிடுமென தெரிவித்தனா்.
இந்த முகாமில், தென்னை விவசாயிகள், தோட்டக்கலை அலுவலா்கள், கோவை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை இறுதியாண்டு மாணவா்கள், திருச்சி வேளாண் கல்லூரி தோட்டக்கலைத் துறை மாணவிகள் கலந்துகொண்டனா்.