தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.3.23 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள்: முதல்வருக்கு பாராட்டு!
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.3.23 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நிதி வழங்கிய முதல்வா், அமைச்சா்கள், பேரவைத் தலைவா் ஆகியோருக்கு தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கம் சாா்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலம், தமிழ்நாடு அரசால் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில் பயணிகள் தங்கும் விடுதி, மாதா காட்சி கொடுத்த மலையைச் சுற்றிலும் பேவா் பிளாக் சாலை ஆகியவை அமைக்க மொத்தம் ரூ.3.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சுற்றுலா வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.