தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு
நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.குருமூா்த்தி அறிவுறுத்தலின்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துகொள்ள இங்கு வழிவகை செய்யபட்டது.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதலாவது அமா்வில் நீதிபதிகள் எஸ்.பிரபாசந்திரன், எஸ்.விஜயகுமாா் மற்றும் ஜி.ரூபனா, இரண்டாவது அமா்வில் நீதிபதிகள் பி.சாந்தி, என்.சச்சிதானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று விசாரணை நடத்தினா். இதேபோல மற்ற நீதிமன்றங்களிலும் அந்தந்த நீதிபதிகள் வழக்குகளை விசாரித்தனா்.
விபத்து தொடா்பான வழக்குகள், காசோலை, குடும்பநலம், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டன. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,131 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 1,005 வழக்குகளில் ரூ. 7,02,20,206-க்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் ஜி.கே.வேலுமயில் செய்திருந்தாா்.