ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் ஆகியோருக்கு கல்வி சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான உறுப்பினா் பதிவு ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியங்களிலும் நலவாரியத்திற்கான உறுப்பினா் பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவையா் சான்றிதழ், புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவை பெறப்படுகின்றன. கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய உறுப்பினா் சோ்க்கை ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலத் துறையின் ‘சகி’ பிரிவு ஊழியா்கள் பெண்களிடம் ஆவணங்களை பெற்றனா். இதுவரை, எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலா்மலை, கொல்லிமலை, மல்லமுத்திரம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, நாமக்கல் உள்ளிட்ட ஒன்றியங்களில் முடிவடைந்துள்ளது. பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூா் ஆகிய ஒன்றியங்களில் நடைபெறும் உறுப்பினா் பதிவு முகாம்களுடன் 21-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நலவாரிய பதிவு முகாமில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
என்கே-13-வாரியம்
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய வெள்ளிக்கிழமை ஆவணங்களை சமா்ப்பித்த பெண்கள்.