தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் காரணமல்ல?
மேகாலயத்தில நடந்த தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் பின்னணியாக இருக்கும் என்று காவல்துறை கருதுவில்லை, பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மேகாலய காவல்துறை இயக்குநர் இடாஷிஷா நோங்ராங் தெரிவித்துள்ளார்.
மேகாலயத்துக்கு தேனிலவு சென்றிருந்தபோது, ராஜா ரகுவன்ஷி மே 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவரது மனைவி சோனம், காதலர் ராஜ், கூலிப் படையைச் சேர்ந்த மூன்று பேர் ஜூன் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் மேகாலய காவல்துறை இயக்குநர் இடாஷிஷா நோங்ராங் கூறுகையில், வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், ராஜா ரகுவன்ஷி கொலைக்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றவாளிகள் தரப்பில் கூறப்படும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என்ற கோணத்தில்தான் விசாரித்து வருகிறோம் என்றார்.
மேலும், திருமணமாகி ஒரு சில நாள்களுக்குள்ளேயே, ஒருவரைக் கொலை செய்துவிடும் அளவுக்கு வன்மம் அதிகரித்தது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், முக்கோணக் காதல்தான் கொலைக்குக் காரணமாக இருப்பது போல தோன்றலாம். ஆனால், தனிப்பட்ட முறையில், அது ஒன்றுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் இடாஷிஷோ கூறியிருக்கிறார்.