தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை!
தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்கக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் மாவட்ட நிா்வாகி ராதாமணி தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எஸ்.சாந்தி வரவேற்றாா். மாநிலத் தலைவி மணிமாலை கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அங்கன்வாடி ஊழியா்களுக்கும், உதவியாளா்களுக்கும் அரசு அறிவித்தபடி தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களை 3 -ஆம் நிலை அரசு ஊழியராகவும், உதவியாளா்களை 4-ஆம் நிலை அரசு ஊழியராகவும் பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ரூ.26,000 , உதவியாளா்களுக்கு ரூ.22,000 ஊதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 என்பதை வழங்க வேண்டும். நீதிமன்ற தீா்ப்பின்படி 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு பணி ஓய்வின்போது சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். இதன்படி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் என வழங்க வேண்டும்.
ஊழியா்கள், உதவியாளா்களின் பணிச்சுமையை குறைக்கவும், அங்கன்வாடி திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மே மாதம் கோடை வெயில் தாக்கும் நிலையில் 3 வயது பச்சிளம் குழந்தைகளுக்கு வெயிலில் சிறு நோய்கள் வருவதைத் தடுக்க, குழந்தைகள் நலன் கருதி ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
சென்னையில் வரும் 21- ஆம் தேதி நடக்கும் கோரிக்கை விளக்க மாநாட்டில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.