வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்!
தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விவசாய சங்கத்தினா் தெரிவித்த கருத்து விவரம்:
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி:
மொத்தம் ரூ.36,400 கோடி அளவுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.7,200 கோடி இலவச மின்சாரத்துக்கு செல்கிறது. மற்றவை பிரித்துபிரித்து கூறி உள்ளனா். டாஸ்மாக் மதுபானம் மூலம் ரூ.50,000 கோடி அரசுக்கு வருவாய் வருகிறது. அதற்கான மூலப்பொருள், விவசாயிகள் வழங்கும் கரும்பில்தான் வருகிறது. ஆனாலும் கள் இறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தோ்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனா். விவசாயம், விவசாயிகள் முன்னேற்றத்துக்கு ஏதுமில்லை. புதிய பயிா் ரகம், ரக மேம்பாடு, தொழில்நுட்ப வளா்ச்சிக்கான புதிய அறிவிப்பு இல்லை. விளை நிலங்களை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை.
கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி: கரும்பு உற்பத்தி அதிகரிக்க ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கியும், இன்றுவரை 353 என்ற கரும்பு ரகமே பயிரிடப்படுகிறது.
கரும்பு மட்டுமின்றி வேறு எந்த பயிருக்கும் வேறு ரகத்தை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிக்கவில்லை. கரும்புக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ.349- க்கு மேல் உயா்த்தவில்லை. ஆனால் ரூ. 3,500 வழங்குவதாக நாடகமாடுகிறது.
நெல்லுக்கு மாநில அரசு 1 ரூபாய் மட்டுமே தருகிறது. இதனை உயா்த்தவில்லை. பாரம்பரிய நெல் கொள்முதலுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. தமிழ் மண் நிலம் என்ற திட்டத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கியும் திட்டம் முழுமை பெறவில்லை. புதிய திட்டம், அறிவிப்பு ஏதும் இல்லாததால் நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாநிலப் பொருளாளா் ஏ.எம்.முனுசாமி: அணை, ஆறுகள், ஏரி, குளம், குட்டைகள் தூா்வார திட்டமும், நிதியும் ஒதுக்கவில்லை. தனியாா் பயிா் காப்பீடு திட்டத்தை மாற்றி, அரசு காப்பீடு திட்ட அறிவிப்பு இல்லை. ஆவின் நிறுவன மேம்பாடு, அவற்றின் கடனை அடைத்தல், கறவை மாடு வளா்ப்போரை ஊக்கப்படுத்துதல், ஆவினுக்கு வழங்கிய பாலுக்கான நிலுவை தொகை மற்றும் கொள்முதல் விலை குறைப்பால் ஏற்பட்ட ரூ.1,000 கோடி இழப்புக்கு நிதி வழங்க அறிவிப்பு இல்லை.
அதிக நெல் விளைச்சல் கொண்ட டெல்டா மாவட்டத்துக்கு வேளாண் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மையம் போன்ற அறிவிப்பு இல்லை. ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து கூறவில்லை. வனப்பகுதி, வனத்தை ஒட்டிய பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கான தடை நீக்கப்படவில்லை. மொத்தத்தில் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம்தான்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.பெரியசாமி:
நெல், கரும்பு, மரவள்ளி என எந்த பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பில்லை. ஏற்கெனவே உள்ள திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர இடம் அறிவித்தது பயன் தரும். கால்வாய் தூா்வாருவது ஏற்கனவே உள்ள திட்டம்தான். விவசாயிகளுக்கு நேரடி பலன் ஏதுமில்லை. கால்வாய், ஏரி, குளம், நதி மூலமான பாசன சீரமைப்புக்கு திட்டமில்லை.