அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பார்த்திவ் படேல் பாராட்டு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.
உலகின் நம்பர்.1 ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். இந்த தொடரில் 516 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஜடேஜா நான்காமிடம் பிடித்தார்.
5 போட்டிகளில் விளையாடிய அவர் 516 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். இந்த தொடரில் அவர் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
பார்த்திவ் படேல் புகழாரம்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா குவித்த 516 ரன்கள் மிகவும் மதிப்பு மிக்கவை. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு முறை பேட்டிங்கில் சொதப்பியது. அந்த நேரத்தில் 6-வது மற்றும் 7-வது இடத்தில் களமிறங்கும் வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இயல்பாகவே அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குகிறார். முதல் போட்டிக்குப் பிறகு, மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பவில்லை. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ஜடேஜா தொடர்ந்து ரன்கள் குவித்தது மிகவும் முக்கியமானதாக மாறியது என்றார்.
இருதரப்பு டெஸ்ட் தொடரில் மூன்று இந்திய வீரர்கள் 500 ரன்களுக்கும் அதிகமாக குவிப்பது இதுவே முதல் முறை. இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசிய டெவான் கான்வே; வலுவான நிலையில் நியூசி.!