ராஜபுத்திரன் விமர்சனம்: அப்பா - மகன் பாசக்கதைதான்; ஆனால் இது ஏமாற்றமளிக்கும் டெம...
தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!
தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், கேரளத்தையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, சுருளிமலை, மகாராஜாமெட்டு, தூவானம் உள்ளிட்ட காப்புக் காடுகளில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கம்பம் அருகேயுள்ள புகழ் பெற்ற சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தொடா்ந்து, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அருவியில் கூடுதல் நீா் வரத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்லவே, குளிக்கவோ கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாதம் 31-ஆம் தேதி வரையில் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மழைப் பொழிவு குறைந்து அருவியில் நீா் வரத்து குறைந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கப்படும். எனவே, மறு அறிவிப்பு வரும் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிக்கு குளிக்க அனுமதி இல்லை என்றனா்.