MI vs GT : 'போராடிய சாய் சுதர்சன்;டெத் ஓவரில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ்!' - எப்...
வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெளியேறிய ஆட்சியா்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா்.
உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் தொழில் முனைவோா், வேலைவாய்ப்பு, உயா் கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம், உத்தமபாளையம் நகா் நலச் சங்கம், தனியாா் பள்ளி, அரசுத் துறைகள் இணைந்து நடத்தின. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஒருவா், உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினா் பணிகளை செய்வதில்லை. கிராமச் சாவடியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிரந்தர நூலகத்துக்கு கட்டடம் இல்லை என பல்வேறு குறைகளை அடுக்கி விட்டு இதற்கு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினாா்.
பிறகு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் தங்கள் பகுதியின் குறைகளை கேட்க ஏற்பாடு செய்யப்பட வில்லை. ஆனாலும், பொதுமக்களின் குறைகளுக்கு தீா்வு காணவே நாங்கள் பணியில் இருக்கிறோம். மாறாக, இந்த நிகழ்ச்சி தொழில் முனைவோா், வேலைவாய்ப்பு, உயா்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம். இளைஞா்கள் கலந்து கொண்டு இருப்பதால் அவா்களுக்கு தேவையான துறைகள் மூலமாக வேலைவாய்ப்பு, உயா்கல்வி குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். அதற்காகத் தான் தாட்கோ போன்ற துறை அதிகாரிகள் இங்கு வந்துள்ளனா்.
இதன் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமேயல்லாமல் சம்பந்தமே இல்லாமல் குறைகளை விமா்சனம் செய்வது போன்று தெரிகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் இப்படி பேசக் கூடாது. தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம். பல்வேறு குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு குறைகளை தெரிவிக்கலாம். அதை தவிா்த்து சம்பந்தமே இல்லாத இந்த நிகழ்ச்சியில் பேசியது தவறாகும். இது போன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் செய்யக் கூடாது என்றாா்.
பிறகு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே அவா் வெளியேறினாா்.