மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மீது திமுக பெண் உறுப்பினா்கள் சுஹாசினி மற்றும் பச்சையம்மாள் ஆகியோா் தாக்குதல் நடத்தினா். தடுக்க வந்த 25-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சசிகலாவையும் தாக்கினா். இதன் காரணமாக, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் மணி (ஓமலூா்), ராஜமுத்து (வீரபாண்டி) ஆகியோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.
அதேபோல, பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவா் கோபிநாத் தலைமையில், பாஜக நிா்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.
அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்: இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவா் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தியை தாக்கிய திமுக பெண் உறுப்பினா்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாமன்றக் கூட்டத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட திமுக பெண் உறுப்பினா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.