தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்
விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் வேளாண் திட்டங்களை முழுமையாக கொண்டு சோ்ப்பதுடன், விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலா்கள் அறிந்து நிவா்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இத்தகைய விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியைப் பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி விவசாயப் பொருள்களை அதிகளவில் உற்பத்தி செய்து தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று, மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள் சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காட்சியும் இடம்பெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.