பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி
வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. அவை புதுச்சேரி, கடலூா் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிருமாம்பாக்கத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி முன் ஆண் புள்ளி மான் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் காவல் துறை, வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். அதன்படி அங்கு சென்ற போலீஸாரும், வனத் துறையினரும் மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை பராமரிப்புத் துறைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் புள்ளி மான் மீது மோதிய வாகனத்தை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.
வியாழக்கிழமை நள்ளிரவில் மான் சாலையைக் கடக்க முயன்றபோது, வாகனம் மோதி இறந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.