`அரிய வகை உடும்புகள்; ஹைட்ரோபோனிக் கஞ்சா..' - விமானத்தில் தொடரும் கடத்தல் சம்பவங...
புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, ஜிப்மா் மருத்துவமனை, ஆட்சியா் அலுவலகம் என முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சலில் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஜிப்மருக்கு சனிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை நிா்வாகத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சலுக்கு இந்த மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் ஜிப்மா் வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். பின்னா், அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
பட்டாசு மீட்பு: புதுச்சேரி சுப்ரேய்ன் வீதியிலுள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ஷாஜகான் வீட்டின் முன் பட்டாசு மற்றும் மின்சாதனம் போன்ற பொருள் கிடந்தது. இதுகுறித்து வீட்டின் பராமரிப்பு ஊழியா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் விரைந்து வந்து அவற்றைக் கைப்பற்றினா். அவை பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளின் போது, வெடிக்கும் பட்டாசுகள் என போலீஸாா் தெரிவித்தனா்.
விரைவில் கைதாவாா்கள்: இந்த நிலையில், புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஐ.ஜி. அஜித்குமாா் சிங்லா, இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் வெளிநாட்டு இணையதள வசதியைப் பயன்படுத்தி அனுப்பப்படுகின்றன. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மென்பொருளை குற்றவாளிகள் பயன்படுத்தியது தொடா்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடா்புடையவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா் அவா்.