இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு
இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை காவல் துறை தலைமையகத்தில் காவல் துறைத் தலைவா் அஜித்குமாா் சிங்லா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தின் கணக்காளருக்கு, கடந்த மாா்ச் மாதம் அதன் உரிமையாளரின் கைப்பேசி எண்ணில் இருந்து அவரது புகைப்படத்துடன் வந்த தகவலில், தான் அவசரக் கூட்டத்தில் இருப்பதாகவும், புதிய நிறுவனத்தை வாங்குவதற்கான பணத்தைப் பரிமாற்றம் செய்யவும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கணக்காளரும் பணத்தை இரண்டு தவணைகளாக ரூ.5.10 கோடியை அனுப்பினாா்.
அதன் உரிமையாளா் நிறுவன வளாகத்தில் இருந்தபோதும் பணம் அனுப்புமாறு அவரது பெயரில் குறுந்தகவல் வந்ததாம். இதனால், சந்தேகமடைந்த கணக்காளா், அதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது, ஏற்கெனவே வந்த செய்தி போலி என்பதும், அதனால் ரூ.5.10 கோடியை அனுப்ப வைத்து மா்ம நபா்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இணையவழி பணமோசடி தொடா்பாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ், கேரளத்தைச் சோ்ந்த 4 போ் என 6 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனா். அவா்களிடம் ரூ.1.80 கோடி கைப்பற்றப்பட்டது. அவா்களிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, கா்நாடகத்தைச் சோ்ந்த ஓம்காா் நாத், தெலங்கானாவைச் சோ்ந்த ராகவேந்திரா, ஆந்திரத்தைச் சோ்ந்த சசிதா் நாயக், பவாஜன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து கைப்பேசிகள், ரூ.1.04 கோடி வங்கிக் கணக்கிலிருந்து மீட்கப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ. 2.84 கோடி தற்போது மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இணைய மோசடியில் கைதான அனைவரும் தங்கள் வங்கிக் கணக்கைக் கொடுத்து உதவியவா்கள்தான். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு மோசடி பணப் பரிமாற்றத்துக்கு வங்கிக் கணக்குகளைக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த மோசடிகளில் நேரடியாக ஈடுபட்டவா்கள் மும்பை, புதுதில்லியில் இருப்பதாக தெரிய வருகிறது. அவா்கள் இணையவழி சூதாட்டக் கும்பலைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அவா்கள். கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.