MI vs GT : 'போராடிய சாய் சுதர்சன்;டெத் ஓவரில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ்!' - எப்படி தோற்றது குஜராத்?
'மும்பை வெற்றி!'
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சவாலளித்த குஜராத் அணிக்கு எதிராக டெத் ஓவர்களை சிறப்பாக வீசி போட்டியைக் கைப்பற்றி இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்குச் சென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

'டாஸ் முடிவின் பின்னணி!'
நேற்றைய தகுதிச்சுற்று போட்டி நடந்த அதே நியூ சண்டிகர் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடந்திருந்தது. நேற்றைய போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் புற்கள் நிறைந்து பௌலிங்கிற்கு சாதகமான பிட்ச்சாக இருந்தது. அதனால்தான் பஞ்சாப் அணி மிகக்குறைவான ஸ்கோரில் ஆல் அவுட் ஆனது. ஆனால், இன்றைய போட்டிக்கு வேறு பிட்ச் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த பிட்ச்சில் புற்கள் அவ்வளவாக இல்லை. கொஞ்சம் ப்ளாட்டாக இருந்தது. அதனால்தான் டாஸை வென்று தைரியமாக முதலில் பேட் செய்யப்போவதாக ஹர்திக் அறிவித்திருந்தார்.
இத்தனைக்கும் மும்பைக்கு முதலில் பேட்ச் செய்து டார்கெட்டை செட் செய்வது கொஞ்சம் சிரமமான விஷயமாக இருந்தது. டார்கெட்டை செட் செய்வதில்தான் தாங்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும் என்பதை ஹர்திக் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

கடந்தப் போட்டியில் கூறிய அந்த விஷயத்தை இந்தப் போட்டியில் மும்பை சரியாக செய்தும் காட்டியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 228 ரன்களை எடுத்திருந்தது. இதற்கு குஜராத் அணியின் மிக மோசமான பௌலிங்கும் பீல்டிங்குமே முதன்மை காரணமாக இருந்தது. குஜராத் அணி லீக் போட்டிகளை தோல்வியோடு முடித்ததற்கு அவர்களின் பௌலிங் ஜொலிக்காதது பிரதான காரணமாக இருந்தது.
கடைசியாக சில போட்டிகளில் மிக எளிதாக 220+ ஸ்கோர்களை கொடுத்திருந்தனர். இந்தப் போட்டியிலும் ஆரம்பத்திலேயே அநியாயத்துக்கு கேட்ச்சை விட்டு மும்பையை செட்டில் ஆகவிட்டனர். ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே பவர்ப்ளேயில் இரண்டு கேட்ச்சுகளை விட்டனர். பின்னர் சூர்யகுமாருக்கு ஒரு கேட்ச்சை விட்டனர். கீப்பர் குசால் மெண்டீஸ் மட்டுமே கைக்கு வந்த இரண்டு கேட்ச்களை விட்டார்.

'அசத்தல் ரோஹித்!'
குஜராத் ஒரு அணியாகவே ரொம்பவே பதற்றமாக இருந்தது. கில் வழக்கத்தை விட கூடுதல் ஆக்ரோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ரோஹித்தும் பேர்ஸ்ட்டோவும் வெளுத்து வாங்கி பவர்ப்ளேக்குள்ளாகவே 79 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்ட்டோ 47 ரன்களை எடுத்து சாய் கிஷோரின் பந்தில் அவுட் ஆனார். ரீப்ளேஸ்மெண்டாக வந்ததற்கு வந்த வேலையை செய்துவிட்டார். ரோஹித்தே அவுட்டாக விரும்பியும் குஜராத் மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை கொடுத்ததால் அவரும் செட்டில் ஆகி ரஷீத் கான், சாய் கிஷோர் போன்ற ஸ்பின்னர்களின் ஓவர்களிலும் சிறப்பான ஷாட்களை ஆடினார்.
ரோஹித் 81 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் அவுட் ஆனார். சூர்யா, திலக், ஹர்திக், நமன் தீர் என பின்னால் வந்த வீரர்களும் அதிரடியாக அடித்து ஆட மும்பை அணி 228 ரன்களை எடுத்தது.

'குஜராத் சேஸிங்!'
குஜராத்துக்கு 229 ரன்கள் டார்கெட். பட்லர் இல்லாத நிலையில் இந்த டார்கெட்டை நோக்கி போட்டியளிக்கும் வகையில் குஜராத் ஆடுவது சிரமம் எனத் தோன்றியது. அதற்கேற்ப போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் கில் lbw ஆகியிருந்தார். ஆனாலும் குஜராத் தடுமாறவில்லை. குசால் மெண்டீஸூம் சாய் சுதர்சனும் பக்குவமாக நின்று ஆடி ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்களாக்கி பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர்.
சாய் சுதர்சன் வழக்கம்போல தன்னுடைய க்ளாஸான ஷாட்களை ஆடினார். ஓடி ஓடியும் ரன்களைச் சேர்த்தார். மெண்டீஸூம் இவரும் சேர்ந்து 64 ரன்களை எடுத்தனர். பவர்ப்ளேக்குப் பிறகு சாண்ட்னரின் பந்தில் பேக் புட்டில் ஒரு ஷாட்டை ஆட முயன்று குசால் மெண்டீஸ் ஹிட் விக்கெட் ஆனார். நம்பர் 4 இல் வாஷிங்டன் சுந்தர் வந்தார். சாய் சுதர்சனும் இவரும் கூட்டணி சேர்ந்த பிறகு சேஸிங்கில் இன்னும் வேகம் கூடியது. இருவரும் இணைந்து 84 ரன்களை அடித்திருந்தனர்.

'நம்பிக்கையளித்த சாய் & வாஷி கூட்டணி!'
சாய் சுதர்சன் கொஞ்சம் அட்டாக்கிங்காக ஆட வாஷி அவருக்கு ஒத்துழைத்து ஆடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாஷியும் வேகமெடுத்து போல்ட்டின் ஓவரிலெல்லாம் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் போட்டி குஜராத்தின் கைக்கு வந்துவிடும் என்ற சூழலில் பும்ராவின் ஓவரில் ஒரு நச் யார்க்கரில் ஸ்டம்புகள் சிதற வாஷி 48 ரன்களில் அவுட். வாஷி 14 வது ஓவரில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் க்ளீசன் வீசிய 16 வது ஓவரில் பைன் லெக் உள்ளே இருப்பதை பார்த்து பைன் லெக்கின் தலைக்கு மேல் ஸ்கூப் ஆட முயன்று போல்டை பறிகொடுத்து 80 ரன்களில் வெளியேறினார்.
'டெத் ஓவர் மிரட்டல்!'
இப்போது போட்டி சமநிலைக்கு வந்தது. கடைசி 3 ஓவர்களில் குஜராத்துக்கு 45 ரன்கள் தேவை. திவேதியாவும் ரூதர்போர்டும் க்ரீஸில் நின்றனர். பும்ரா வீசிய 18 வது ஓவரில் திவேதியா ஒரு சிக்சரை அடிக்க 9 ரன்கள் வந்தது. 19 வது ஓவரை போல்ட் வீசினார். முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று ரூதர்போர்டு அவுட் ஆனார். ஷாரூக்கான் உள்ளே வந்தார். ஓவரின் கடைசிப் பந்தை சிக்சரும் ஆக்கினார். கடைசி ஓவரில் குஜராத்துக்கு 24 ரன்கள் தேவை.

ஹர்திக்குக்கே ஓவர் இருந்தது. அஸ்வனி குமாருக்கும் ஓவர் இருந்தது. ஆனாலும் க்ளீசனுக்கே கடைசி ஓவரை கொடுத்தார் ஹர்திக். இது ஒரு கேம்பிளாக தெரிந்தது. ஆனாலும் மும்பைக்கு சாதகமான ரிசல்ட்தான் கிடைத்தது. திவேதியா ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்து ஸ்லோயர் ஒன். ஒரு ரன் மட்டுமே. அடுத்த பந்து ஒயிட் ஆப் ஸ்டம்ப் லைன். ஷாரூக்கான் டாட் ஆக்கினார். அடுத்த பந்தும் அதே லைன். ஆனால், இந்த முறை 2 ரன்கள். கடைசி 3 பந்துகளில் 21 ரன்கல் தேவை. குஜராத்தின் தோல்வி உறுதியானது. உடனே க்ளீஸனுக்கு ஓவரை கட் செய்துவிட்டு கடைசி 3 பந்துகளை அஸ்வனி குமாருக்கு கொடுத்தார் ஹர்திக்.

அவர் ஷாரூக்கானின் விக்கெட்டை எடுத்ததோடு மேற்கொண்டு ரன்னையும் எடுக்கவில்லை. 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது. சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் பார்ட்னர்ஷிப் உடைபட்ட இடம்தான் பிரச்னையாக மாறியது. அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்த பும்ராதான் கேம் சேஞ்சர்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்புக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு மும்பை செல்கிறது. ப்ளே ஆப்ஸில் மும்பை எப்போதுமே ஆபத்தான அணிதான். ஆக இன்னும் என்னவெல்லாம் சம்பவங்களை செய்ய அவர்கள் காத்திருக்கிறார்களோ!