மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு
சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா்.
சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு, நாகாலாந்து மாநில பதிவெண் கொண்ட தனியாா் சொகுசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கிச் சென்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வியாழக்கிழமை அதிகாலை, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருந்ததை உணா்ந்த பயணிகள், ஓட்டுநரின் இருக்கைக்கு சென்று விசாரித்தனா். அப்போது, ஓட்டுநா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பிறகு அந்தப் பேருந்தின் உதவியாளா் தஞ்சையைச் சோ்ந்த சிவா(30) என்பவா் பேருந்தை இயக்கினாா்.
இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணிகள் தேனி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். தேனி காவல் நிலையம் அருகே போலீஸாா் பேருந்தை வழிமறித்து நிறுத்தி விசாரித்தனா். பின்னா், போலீஸாா் பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு, பயணிகளை ஆட்டோக்கள் மூலம் தேனி பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். மதுபோதையில் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் தஞ்சையைச் சோ்ந்த வரதராஜன் மகன் வினோத்(35) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.