மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி கடந்த 9 நாள்களாக பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய வனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த திங்கள்கிழமை வினாடிக்கு 5,200 கன அடியாக இருந்த நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து, புதன்கிழமை காலை 7,735 கன அடியானது. பின்னா், அன்று மாலை 4 மணி நிலவரப்படி நீா்வரத்து 6,425 கன அடியாகக் குறைந்தது. வியாழக்கிழமை காலை மீண்டும் நீா்வரத்து வினாடிக்கு 7,318 கன அடியாக அதிகரித்து, மாலையில் 5,975 கன அடியாகக் குறைந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணைக்கு 7,740 கன அடியாக இருந்த நீா்வரத்து, மாலையில் 7,809.70 கன அடியாக உயா்ந்தது. தொடா் நீா்வரத்தின் காரணமாக, கடந்த 6 நாள்களில் அணையின் நீா்மட்டம் 15 அடி உயா்ந்தது. இதனால், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
அணை நிலவரம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 129 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது. அணையில் நீா் இருப்பு 4,482 மில்லியன் கன அடி. அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 933 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணைப் பகுதியில் 82.6 மி.மீட்டரும், தேக்கடியில் 43.2 மி.மீட்டரும் மழை பதிவானது.
நாளை தண்ணீா் திறப்பு: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி, தேனி வட்டாரங்களில் 14,707 ஏக்கா் நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக பாசனத்துக்கு வினாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட குடிநீா்த் தேவைக்கு வினாடிக்கு 100 கன அடியும் என மொத்தம் 300 கன அடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.