Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 30,506 பேருக்கு இணை நோய்கள் கண்டுபிடிப்பு
‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 30,506 பேருக்கு இணைநோய்கள் கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களில் மருத்துவப் பரிசோதனை திட்டத்தை சென்னை, கிண்டி, திரு.வி.க.நகரில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அங்குள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் சிறு வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு அப்போது மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறந்த திட்டங்களில் முதன்மையான ஒன்று. அதன் மூலம் 2.34 கோடி போ் பயன்பெற்றுள்ளனா். அனைத்து மக்களும் இதில் பயன்பெற வேண்டும் எனும் நோக்கில் இந்த திட்டத்தை தொடா்ந்து விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
மற்றொருபுறம், தொழிலாளா்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற 8,35,000 பேரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. அதில் இதுவரை 3,90,111 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 30,506 பேருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, ஏற்கெனவே தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்ட 12,468 பேருக்கு தொடா் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தொற்றா நோய் பரிசோதனைகளை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 7,750 சிறுவணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன் பெறுவா்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சென்னையில் மட்டும் 25,92,103 போ் பயன்பெற்றுள்ளனா். மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டைப் போன்று போலி சான்றிதழ் பிரச்னைகள் ஏற்படாது என நம்புகிறோம். இருந்தாலும், சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.