சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூா்ஆட்சியா் ஆய்வு
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் டவா் ரோடு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது தோல் தயாரிப்பு முறைகளை கேட்டறிந்தாா். அப்போது தொழிலதிபா் காகா தாவூத் அஹமத் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்கள் இணைந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கோரிக்கை மனு விவரம்: துத்திப்பட்டு டவா் ரோடு பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அப்பகுதிக்கு வேலைக்காக வந்து செல்கின்றனா். அதேபோல தோல் மூலப் பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட தோல் பொருள்கள் ஆகியவை லாரிகள் மூலம் கொண்டு வந்து, கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் சரியான சாலை வசதி இல்லை. கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால்வாய்கள் இல்லை. தெரு விளக்குகளும் இல்லை. இரவு நேரத்தில் தொழிலாளா்கள் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் போது இருள் சூழ்ந்த நிலையில் இருப்பதால் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, டவா் ரோடு பகுதியில் இயங்கும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கழிவநீா் கால்வாய், சாலை, தெரு விளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பாஸ்கரன், வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் உடனிருந்தனா்.