Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா
நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவும் மும்பையும் மோதின. மற்றொன்றில் குஜராத்தும் கேரளாவும் மோதின. இதில் முதல் நான்கு நாள்கள் முடிவில், விதர்பா vs மும்பை போட்டியில், முதல் இன்னிங்ஸில் விதர்பா 383 ரன்களும், மும்பை 270 ரன்களும் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் விதர்பா 292 ரன்கள் குவித்து மும்பைக்கு 406 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மறுபக்கம், குஜராத் vs கேரளா ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆக, குஜராத் அணி 400 ரன்களைத் தாண்டி களத்தில் நின்றது.

இந்த நிலையில், இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் இன்று கடைசி நாளை எட்டின. ரஞ்சி டிராபி விதிமுறைகளின்படி காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் டிரா ஆகிறதென்றால் முதல் இன்னிங்ஸில் எந்த அணி முன்னிலைப் பெற்றிருந்ததோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இன்று கேரளாவுக்கெதிரான அரையிறுதியில் குஜராத் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே, முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் எடுத்துவிட்டதால், குஜராத் தனது வெற்றியை உறுதி செய்ய 458 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
குஜராத்தும் போராடி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 455 ரன்கள் வரை வந்து. இன்னும் 3 ரன்கள் எடுத்துவிட்டால் குஜராத் பைனல் செல்லலாம். அதேசமயம், குஜராத்தை அந்த 3 ரன்களை எடுக்கவிடாமல் இருக்கின்ற ஒரு விக்கெட்டையும் எடுத்துவிட்டால் கேரளா பைனல் செல்லலாம். இப்படியான சூழலில், களத்தில் நின்றிருந்த குஜராத் வீரர் அர்சான் நாக்வஸ்வல்லா, கேரளா வீரர் ஆதித்யா சர்வேட் வீசிய பந்தை ஓங்கி அடிக்க, அது அருகிலேயே பீல்டிங்கில் நின்றிருந்த கேரளா வீரரின் ஹெல்மெட்டில் பட்டு எகிறி கேரளா கேப்டன் சச்சின் பேபி கைகளில் தஞ்சமடைந்தது.
1⃣ wicket in hand
— BCCI Domestic (@BCCIdomestic) February 21, 2025
2⃣ runs to equal scores
3⃣ runs to secure a crucial First-Innings Lead
Joy. Despair. Emotions. Absolute Drama!
Scorecard ▶️ https://t.co/kisimA9o9w#RanjiTrophy | @IDFCFIRSTBank | #GUJvKER | #SF1pic.twitter.com/LgTkVfRH7q
இதனால், முதல் இன்னிங்ஸில் 455 ரன்களில் குஜராத் ஆல் அவுட்டாக, 2 ரன்கள் முன்னிலையுடன் கேரளா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆட்டநேர முடிவில், கேரளா அணி 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுக்க போட்டி டிரா ஆனது. ரஞ்சி விதிகளின்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றதன் அடிப்படையில் கேரளா, ரஞ்சி டிராபி வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணியை 325 ரன்களில் ஆல் அவுட்டாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play