நவஜீவன், திருக்குறள் அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருக்குறள், நவஜீவன் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோட்டத்துக்குட்பட்ட கவரைப்பேட்டை, பொன்னேரி ரயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் அகமதாபாத் செல்லும் நவஜீவன் அதிவிரைவு ரயிலும் (எண்: 12656) , பிப்.19-இல் நியூ ஜல்பைகுரி செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 22611), பிப்.21-இல் புவனேசுவரம் செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 12829) அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.
அதேபோல் பிப்.12-ஆம் தேதி கன்னியாகுமரி - நிஜாமுதீன் இடையே இயங்கும் திருக்குறள் அதிவிரைவு ரயிலும், பிப்.16-இல் மதுரை - நிஜாமுதீன் இடையே இயங்கும் சம்பாா்க் கிராந்தி அதிவிரைவு ரயிலும், பிப்.18-இல் ராமேசுவரம் - ஃபெரோஸ்பூா் இடையே இயங்கும் ஹம்சபா் அதிவிரைவு ரயிலும் சென்னை கடற்கரை, அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.
மேலும், மதுரை - சன்டிகா் அதிவிரைவு ரயில் பிப்.12 -ஆம் தேதியும், கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் பிப்.18-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மேல்பாக்கம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் திருத்தணியில் நின்றுசெல்லும்.
பகுதி ரத்து: விஜயவாடாவிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு வரும் பினாகினி அதிவிரைவு ரயில் கூடூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் அதேநாள்களில் கூடூரிலிருந்து புறப்பட்டு விஜயவாடா சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.