மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை
வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் சித்திக், பொருளாளா் பாலா ஆகியோா் தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் ரயில் இயக்குதல் மேலாளா் சுப்பிரமணியன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன், திருச்சி கோட்ட பயணிகள் ரயில் முதுநிலை இயக்குதல் மேலாளா் ரமேஷ்பாபு ஆகியோருக்கு எழுதிய கோரிக்கை கடிதம்:
காரைக்கால் - திருநள்ளாறு - பேரளம் பழைய மீட்டா் கேஜ் ரயில் பாதையை 23.5 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதையாக மின்மயமாக்கலுடன் மாற்றி அமைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் என்ஜின் நாகை மற்றும் திருவாரூா் ரயில் நிலையங்களில் மாற்றப்பட்டு, இயக்கப்படுகிறது.
தற்போது காரைக்கால்- பேரளம் அகலப் பாதை பணி நிறைவடைந்துள்ளதால், எஞ்சினை மாற்றாமல் சென்னைக்கு ரயிலை இயக்க முடியும். பயண நேரமும் 1.30 மணி நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், நாகூா் தா்கா, வேளாங்கண்ணி பேராலயம், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோயில் என மும்மதத்தையும் இணைக்கும் ரயில் பாதையாகும்.
எனவே, காரைக்கால்-பேரளம் ரயில் பாதை திறந்தவுடன், வேளாங்கண்ணி-சென்னை-வேளாங்கண்ணிக்கு, காரைக்கால், பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் (56809/56810), திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் (16843/16844), திருச்சி- திருவாருா்-திருச்சி பயணிகள் ரயில் (56805/56806), மதுரை- புணலூா்-மதுரை விரைவு ரயில் (16729/16730) ஆகியவற்றை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.
காரைக்கால்-திருநெல்வேலி இடையே நாகை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக நேரடியாக ரயில் இயக்க வேண்டும். காரைக்கால்-பெங்களூா் இடையே தினசரி இரவு நேர விரைவு ரயிலை நாகூா், நாகை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்.
காரைக்காலில் இருந்து புறப்படும் தாம்பரம் (16175/16176), பெங்களூா் (16529/16530) மும்பை வாரந்திர ரயில்(11017/11018) ஆகியவற்றை, வேளாங்கண்ணியில் இருந்து நாகை, காரைக்கால், திருநள்ளாறு வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.