தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராக இருந்த ரஜ்னீஷ், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அடையாளம் தெரிவிக்க விரும்பாத நபர் மூலம் காவல்நிலையத்துக்குப் புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில், ஏராளமான பெண்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், காவல்நிலையத்துக்கும், மகளிர் ஆணையத்துக்கும் பேராசிரியர் மீது புகார்களை அளிக்கத் தொடங்கினர்.
அடையாளம் தெரியாமல் புகார் அளித்திருப்பவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதையடுத்து, பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புகார்கள் வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தத் தொடங்கிய நிலையில், பேராசிரியர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.
கடந்த வாரம், காவல்துறைக்கும், மகளிர் ஆணையத்துக்கும் வந்த புகார் கடிதத்தில், முதலில், மாணவிகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை பாலியல் துன்புறுத்தி அதனை விடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதை தொடர்ந்து செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்லூரியில் இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், மாணவிகளை தயவு செய்து காப்பாற்றுங்கள். சமூகத்துக்குப் பயந்து அவர்கள் எதையும் வெளியே சொல்வதில்லை. இந்த கொடூர நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னைப் போன்ற பெண்களுக்கு நீதி வழங்குங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், அந்த பேராசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் சில புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார். இளம் பெண்களுடன் பேராசிரியர் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.