அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரி, 71.6 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.
அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகவும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை:
கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள், மர நிழல்களில் அவற்றை பராமரிக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி அதன்மீது தண்ணீா் தெளிப்பதன் மூலம் வெப்பதாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம்.
கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவை வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் குறைக்க தெளிப்பான் உபயோகிக்குமாறும், தீவனத்தில் வைட்டமின் சி, பீட்டைன் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.