மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்
நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு
பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் நகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரி, மசூதி உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளது.
இங்கு மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து அதிக துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீரின் நிறம் மாறி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், வரவுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும், குப்பை கிடங்கையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடி நீரை பாட்டிலில் எடுத்து வந்து பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தியிடம் காண்பித்து மனு அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையா் உறுதி அளித்தாா்.