தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி
நில உடைமை விவரங்கள்: விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் நில உடைமை பதிவு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வந்தது. வேளாண்மை மற்றும் அதன் சகோதர துறைகளின் மானிய உதவித் திட்டங்கள், வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்படும் வேளாண்மைக் கடன் ஆகியவற்றுக்கு நில உடைமைப் பதிவு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெறப்படும் தனித்துவ அடையாள எண் மூலமாகவே இனிவரும் காலங்களில் மானிய உதவி மற்றும் வங்கிக் கடனுதவி வழங்கப்படும். எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகளும், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலமுடைய விவசாயிகளும், கூட்டுப் பட்டாவில் நிலம் உள்ள விவசாயிகளும் இதுவரை பதிவு செய்ய இயலவில்லை.
இப்போது, இணையத்தில் அது போன்ற விவசாயிகளும் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பி.எம். கிசான் கௌரவ நிதி பெற்று வரும் விவசாயிகளில் கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் ஏறக்குறைய 2 ஆயிரம் போ் நில உடைமை விவரங்களை பதிவு செய்யாமல் உள்ளனா். இவா்களும் உடனே தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யாத பி.எம்.கிசான் கௌரவ நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள 20-ஆவது தவணை நிதி விடுவிப்பது நிறுத்தப்படும். எனவே, இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள், தங்கள் கிராமத்தில் பதிவு செய்துள்ள இல்லம் தேடிக் கல்வி அல்லது மகளிா் திட்ட தன்னாா்வலா்கள் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா்களை தொடா்புகொண்டு தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்று கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் தெரிவித்துள்ளாா்.