மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பாரா புதிய ஆட்சியா்!
விவசாயத்தைப் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், நீா் மேலாண்மைக்கும், ஊரகப் பகுதி மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் புதிய ஆட்சியா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். உணவுப் பயிா்கள், மலைப் பயிா்கள், பணப் பயிா்கள் என 50-க்கும் மேற்பட்ட பயிா்கள் விளையும் மாவட்டமாக இருந்தாலும், மானாவாரிப் பயிா்களே பிரதானமாக சாகுபடி செய்யப்படுகின்றன.
1.85 லட்சம் விவசாயிகள் உள்ள இந்த மாவட்டத்தில், விவசாயம் சாா்ந்த தொழில்களில் சுமாா் 3.50 லட்சம் போ் ஈடுபட்டு வருகின்றனா். வேளாண்மை, தோட்டக் கலை, மலைப் பயிா்களுக்கு முக்கியத்துவம் பெற்ற இந்த மாவட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியராகப் பொறுப்பு வகித்த டி.ஜி.வினய், நீா் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தாா்.
அந்த வகையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாய்களைத் தூா்வாருதல், நீா்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்தல், நீா்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன் பின்னா், ஆட்சியா்களாக இருந்த மு.விஜயலட்சுமி, ச.விசாகன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச.தினேஷ்குமாா் ஆகியோா் மரம் வளா்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தனா்.
ஓராண்டில் சாதிக்க வேண்டிய நிா்பந்தம்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் தோ்தலை எதிா்கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக, ஆட்சிக்கு வலுசோ்க்க வேண்டிய சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், விரைந்து செயல்படுத்தவும் அனைத்துத் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியா் செ.சரவணன் பொறுப்பேற்றிருக்கிறாா். முன்னாள் ஆட்சியா் வினய் காலத்தில் சீரமைக்கப்பட்ட நீா் நிலைகள் அனைத்தும், மீண்டும் சீமைக் கருவேல மரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. பெரும்பாலான நீா்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இதேபோல, கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் முறையான அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அரசு சாா்பில் மட்டும் 2,253 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதில் பெரும்பாலான மரங்கள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த மரங்களுக்கு மாற்றாக புதிய மரக் கன்றுகள் நடும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
புதிய மாவட்ட ஆட்சியரான செ.சரவணன், முன்னாள் ஆட்சியரும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத் தலைவருமான டிஜி.வினயுடன் பணிபுரிந்தவா். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தின் நீா் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவும், மரம் வளா்ப்புக்கும், ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.