நூறு நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி 100 ஊராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்துவதாக விவசாயத் தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், அதன் மாவட்டத் தலைவா் வேணு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் இல்லாததால் தொழிலாளா்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாகை மாவட்டத்தில் ஜூன் 27-ஆம் தேதி நூறு நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி, 100 ஊராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.