பணத் தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: இருவா் கைது
சென்னை கொடுங்கையூரில் பணத் தகராறில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
கொடுங்கையூா் எம்ஜிஆா் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிரி (50). மாற்றுத்திறனாளியான இவா், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மகன் அஜித்குமாருடன் (19) வசித்து வந்தாா். அஜித்குமாரின் பாட்டி கடந்த மாதம் 26-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அங்கு அந்த பகுதியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் ஜனாா்த்தனன் மூலம் சாமியானா பந்தல் போடப்பட்டதாம். ஆனால் அந்த பந்தலுக்குரிய ரூ. 8 ஆயிரம் வாடகையை அஜித்குமாா் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஜனாா்த்தனனுக்கும் அஜித்குமாருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில் கிரி, வெள்ளிக்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது வீட்டுக்குள் அஜித்குமாா் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அஜித்குமாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.
அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, ஜனாா்த்தனனும் அவரது நண்பா் பாா்த்திபனும்தான் என்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், சம்பவத்தன்று இருவரும் ரூ. 8 ஆயிரத்தை கேட்க அஜித்குமாா் வீட்டுக்குச் சென்றதும், அங்கு பணத்தை கேட்கும்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அஜித்குமாரை இருவரும் தாக்கி, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.