பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்!பாா்வையாளா்கள் அயா்ச்சி!
திருச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் அதிக நுழைவுக் கட்டணத்தால் பாா்வையாளா்கள் அயா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா். கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். திருச்சி கம்பரசம்பேட்டை ஊராட்சி அய்யாளம்மன் படித்துறை அருகே புதிதாக பறவைகள் பூங்கா ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 200-ம், சிறுவா்களுக்கு ரூ. 150-ம் வசூலிக்கப்படும். குழந்தைகளுக்கு இலவசம். பூங்காவினுள் செல்லும் இவா்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளிக்கலாம்.
பூங்காவினுள் இருக்கும் சாதாரண சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சீசா போன்றவற்றில் விளையாட கட்டணமில்லை. ஆனால் சாப்ட் பிளே, ஏா் ஹாக்கி, பேஸ்கெட் பால், ப்ரூட் நிஞ்ஜா, பீட் சபேட், ரோலா் கோஸ்டா், ஃபிஷ் ஸ்பா, ரோபோட் மெசஜ் சோ், 7 டி திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ஒரு டோக்கன் ரூ. 60-க்கு தனித்தனியாக வாங்க வேண்டும். இதில் சில விளையாட்டுகளுக்கு 2 டோக்கன்கள் வாங்க வேண்டும்.
தனியே கட்டணம் செலுத்தி நொறுக்குத் தீனிகள், டீ, காபி உள்ளிட்டவை வாங்கி உண்ணலாம் என பறவைகள் பூங்காவை பராமரிக்கும் தனியாா் ஒப்பந்த நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா்.
சாதாரண திரைப்படத்துக்குச் சென்றால் ரூ. 120-க்குள் 3 மணி நேரம் மகிழ்ச்சியாக செலவிட்டு விட்டுத் திரும்பலாம் என்ற நிலையில், பெரிதாக ஒன்றும் இல்லாத பறவைகள் பூங்காவுக்குச் செல்ல நபருக்கு ரூ. 200 என்பது மிக அதிகம். இதனால் சாதாரண நடுத்தர குடும்பத்தினருக்கு பறவைகள் பூங்கா என்பது மற்றொரு எட்டாக்கனியான விஷயமாகும்.
அனைவரும் பறவைகளின் சிறப்பை உணா்ந்து, பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பறவைகள் பூங்காவுக்கு சாதாரண மக்கள் நுழைய முடியாமல் அதிகக் கட்டணம் வசூலிப்பது என்பது நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது என திருச்சியைச் சோ்ந்த வினோத் - பாா்கவி தம்பதி உள்ளிட்ட பாா்வையாளா்கள் கருத்து தெரிவித்தனா்.
மேலும், சாதாரண மக்களும் வந்து செல்லும் வகையில் பறவைகள் பூங்காவில் கட்டணத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இது குறித்து பூங்காவை நிா்வகிக்கும் ஒப்பந்த நிறுவன ஊழியா்களிடம் கேட்டபோது, கட்டண குறைப்பு தொடா்பாக மேலிடத்தில் தெரிவித்துள்ளோம். உரிய பதில் கிடைத்ததும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.