உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதேபோன்று பல்வேறு கோயில்களில் திருட்டு நடந்துள்ளது.
இந்தத் திருட்டு சம்பவம் தொடா்பாக உதவி ஆய்வாளா்கள் இந்துசூடன், ஜான்போஸ்கோ ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தனிப்படை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞரை மாா்த்தாண்டத்தில் வைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், மேலகிருஷ்ணன்புதூா் பகுதியைச் சோ்ந்த திருமால்நாடாா் மகன் அன்பரசு (31) என்பதும், நட்டாலம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் தக்கலை அருகே பிலாங்காலை கோயில், குன்னம்பாறை கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திருடியதையும் ஒப்புக்கொண்டாா்.
அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து சூலாயுதம், விளக்கு, தங்க பொட்டு மற்றும் ரூ. 9 ஆயிரம் சில்லறை நாணயங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் உதயரேகா வேளாங்கண்ணி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.