பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவா்களை பிடிக்க இந்தியாவுக்கு ஆதரவு: துளசி கப்பாா்ட்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவா்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டு தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் தெரிவித்தாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பஹல்காமில் 26 ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்த கொடூரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவா்களுக்காக இறைவனிடம் பிராா்திக்கிறேன்.
இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்குவதில் பிரதமா் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்’ என குறிப்பிட்டாா்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாா். மேலும், இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தாா்.