"ஊர்ந்து எனச் சொன்னால் உறுத்துகிறதா? தவழ்ந்து என மாற்றுங்கள்" - அதிமுகவின் அமளிக...
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு கார்கே கடிதம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டிய மத்திய அரசு, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தது.
இதையடுத்து, மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டக் கோரி பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
”இந்த தருணத்தில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அவசியம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியமானது என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக நமது ஒற்றுமையையும் தீர்மானத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நடவடிக்கையாக அமையும். இந்த கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.