பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவிருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார். மிகவும் அழுத்தம் மிக்க இந்தப் பணிக்கு விரைவில் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்கள் கேரி கிரிஸ்டன், ஜேஸன் கில்லெஸ்ப்பி ஆகியோர் சமீபத்தில் ராஜிநாமா செய்தனர். இதனால், புதிய தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் இயக்குநரைத் தேட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.
இருவரும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் 8 மாதங்களிலே ராஜிநாமா செய்தனர். இதனால், தேசிய அணி தேர்வர் குழுவில் இருந்த ஆகிப் ஜாவேத்தை நியூசிலாந்து டி20 தொடர் வரை இடைக்கால பயிற்சியாளராக பிசிபி நியமித்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் பதவியை எதிர்நோக்கும் அசார் மஹ்மூத், தான் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த போது நிறைய கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மிக்கி ஆர்தர், கிரிஸ்டன், கில்லெஸ்ப்பி ஆகியோருடனும் பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மே 5 ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்கள் நிறைவேற்ற கால அவகாசம் கொடுத்துள்ளது. டி20, ஒருநாள், டெஸ்ட்க்கு தனித்தனியே பயிற்சியாளரை நியமிக்குமா அல்லது ஒரே பயிற்சியாளரை நியமிக்குமா என பிசிபி இன்னும் உறுதிபடுத்தவில்லை.
பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்தாக் இடைக்கால பந்துவீச்சாளராக பணியாற்றுவதால் அவரும் இந்தப் போட்டியில் தொடர்கிறார். ஆனாலும், இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் மைக் ஹேசன் முன்னணியில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களில் சக்லைன் முஷ்டாக், முகமது ஹபீஸ், ஆகிப் ஜாவேத் உள்ளிட்டோரும் இந்தப் போட்டியில் உள்ளனர்.
இதையும் படிக்க:வைபவ் சூர்யவன்ஷி திறமையானவர்தான், ஆனால்... முன்னாள் வீரரின் அறிவுரை!