மோதலைக் கைவிட்டு இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சௌதி அரேபியா!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம் குறித்து சௌதி அரேபியா அரசு கருத்து தெரிவித்துள்ளது.
பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில், 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஈடுபாடுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன் இரு நாடுகளும் தங்களது குடிமக்களை தாயகம் திரும்ப அறிவுறுத்தியதுடன், போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர். இத்தகைய, பதற்றமான சூழலில், இந்தியாவின் முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்.29) முழு சுதந்திரம் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கும் அபாயமுள்ளதினால், இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வுக் காண சௌதி அரேபிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் இரு நாடுகளின் எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து சௌதி அரேபிய அரசு அதன் வருத்ததைத் தெரிவித்து கொள்கின்றது. எனவே, இருநாடுகளும் போர் நடவடிக்கைகளை தவிர்த்து, அவர்களுக்கு இடையிலுள்ள பிரச்னைகளை ராஜத்தந்திர முறையில் தீர்வுக் காண வேண்டும்.’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களின் நலனுக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் மேற்கொண்டு போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சௌதி அரேபிய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!