ரூ.244 கோடி வரி பாக்கி: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?
பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இந்தத் தாக்குதலில் அவர் வீட்டின் கண்ணாடிகள், கார், பைக் ஆகியவை சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.
ஜலந்தரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நேற்று (ஏப். 7) நள்ளிரவு 1 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் மனோரஞ்சன் காலியாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய இருவரைக் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மின் ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய காவல்துறை சிறப்பு இயக்குநர் அர்பித் சுக்லா, “இந்தத் தாக்குதல் சமூக அமைதியைக் குலைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ அமைப்பொன் சதித்திட்டம். கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பாகிஸ்தான் கேங்ஸ்டர் ஷாஷாத் பாத்தி ஆகியோரின் கூட்டாளியான ஸீஷன் அக்தர் இதில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசுடன் இணைந்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.
சமீப காலங்களில் பஞ்சாபில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்துவரும் நிலையில் அரசியல் தலைவரை நோக்கி இவ்வாறு தாக்குதல் நடைபெறுவது சமீபமாக இதுவே முதல்முறை.
இதேபோன்று, கடந்த மாதம் அமிர்தசரஸ் பொற்கோவில் வெளியே குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது.