பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித் தொகைக்கான ஆணை வழங்கல்
அரியலூா் மாவட்டத்தில், மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ், தாய், தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு அவா்களின் திட்ட காலத்துக்கு ஏற்றவாறு படிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக மாதம் ரூ.4,000- வீதம் 2024 அக்டோபா் முதல் 2025 மாா்ச் வரை மொத்த கூடுதல் தொகை ரூ.1,07,04,000-க்கான ஆணையை வழங்கினாா்.
மேலும், வளா்ப்பு பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 3 குழந்தைகளுக்கு அவா்களின் படிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் 2024-அக்டோபா் முதல் 2025-மாா்ச் வரைக்கான 6 மாதங்களுக்கு மொத்த கூடுதல் தொகை ரூ.72,000-க்கான ஆணையும் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.