பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி
பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தானே தலைவராக செயல்படவுள்ளதாகவும் தலைவராகவுள்ள அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து, கட்சிப் பொதுக்குழுவால் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தானே தலைவராகத் தொடர்வேன் என்று அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜி.கே. மணி செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
”மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு வருகின்ற மே 11 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
பாமக தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் மாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள்.
கட்சிக்குள் சலசலப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்னைகள் சரியாகிவிட்டது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை. அந்த பிரச்னை மேலும் பெரிதாகாது” என்றார்.