பாலியல் ‘சார்’-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
சென்னை: சென்னை தாம்பரம் அருகேயுள்ளதொரு அரசு சேவை இல்லத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியொருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூன் 9) கூறியிருப்பதாவது:
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் ’அவுட் ஆஃப் கண்ட்ரோல்(கட்டுப்பாட்டை மீறி)’ இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்?
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.