பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரதமர் மோடி ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் நகரான திருப்பூர் தவிக்கிறது.
குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷிய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?
நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவண செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஸ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.