பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? முதல்வர் விளக்கம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உதகையில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப். 6) தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை. இதை முன்னதாகவே பிரதமரிடம் தெரிவித்துவிட்டேன். இவ்விழாவுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்றுள்ளனர்.
பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
* நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூ. 26 கோடியில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் உருவாக்கப்படும்.
* ரூ. 10 கோடியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
* நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகைக் கண்டு களிக்கும் வகையில் ஏறி இறங்கும் சுற்றுலா முறை அறிமுகம் செய்யப்படும்.
* நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பழங்குடியினருக்கு ரூ. 10 கோடியில் 200 வீடுகள் கட்டித் தரப்படும்.
* ரூ. 20 கோடியில் பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.
* பழங்குடின மக்களுக்கு 23 சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்படும்” என்றார்.
இதையும் படிக்க: உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!