ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது; கட்சி கட்டடமே வசிப்பிடம் - சிபிஎம் தேசிய பொதுச் செயலாளரான எம்.ஏ.பேபி!
மதுரையில் நடந்த சி.பி.எம் அகில இந்திய மாநாட்டில் புதிய தேசிய செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு-க்கு அடுத்தபடியாக கேரளாவில் இருந்து சி.பி.எம் தேசிய பொதுச்செயலாராக கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எம்.ஏ.பேபி. 71 வயது ஆகும் மரியன் அலெக்ஸாண்டர் பேபி என்ற எம்.ஏ.பேபி-க்கு கடந்த 5-ம் தேதி பிறந்தநாள் என்பதால், இந்த பதவி பிறந்தநாள் பரிசு என சிலாகிக்கின்றனர் சி.பி.எம் நிர்வாகிகள்.
1972-ம் ஆண்டு முதல்...
1972-ம் ஆண்டு முதல் சி.பி.எம் உறுப்பினராக உள்ளார். எமெர்ஜென்ஸி காலத்தில் சிறைவாசமும் அனுபவித்துள்ளார். 30 ஆண்டுகளாக சி.பி.எம் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். 2012-ம் ஆண்டு முதல் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார். தனது 19-ம் வயதில் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மாநில தலைவராக இருந்தார். அந்த சமயத்தில் எஸ்.எஃப்.ஐ மாநில செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் இருந்தார். எஸ்.எஃப்.ஐ அகில இந்திய தலைவராகவும், சி.பி.எம் இளைஞரணியான டி.ஒய்.எஃப்.ஐ அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்துள்ளார் எம்.ஏ.பேபி.

40 ஆண்டுக்கு முன்பு எஸ்.எஃப்.ஐ அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து எம்.ஏ.பேபி மாறியபோது அந்த பதவி சீத்தாராம் யெச்சூரி-க்கு வழங்கப்பட்டது. இப்போது சீத்தாராம் யெச்சூரி மறைவுக்குப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி எம்.ஏ. பேபிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியரான பி.எம்.அலெக்ஸாண்டர் - லில்லி அலெக்ஸாண்டர் தம்பதியினரின் 8-வது மகன் எம்.ஏ.பேபி. கொல்லம் பிராக்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.பேபி கொல்லம் எஸ்.என் கல்லூரியில் பயின்றார். அரசியலுக்கு வராமல் இருந்தால் ஆசிரியர் ஆகியிருப்பார். எஸ்.எஃப்.ஐ நிர்வாகியாக பணிசெய்தபோது பழக்கமான பெற்றி லூயிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரே மகனான அப்பு என்ற அசோக் ஹிட்டார் இசைக் கலைஞராக உள்ளார். சொந்தமாக ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் எளிமையான வாழ்க்கை வாழும் எம்.ஏ.பேபி திருவனந்தபுரத்தில் உள்ள மாநில சி.பி.எம் அலுவலகமாக ஏ.கே.ஜி செண்டருக்கு எதிர்புறம் உள்ள கட்சி கட்டடத்தில் வசித்துவருகிறார்.

டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளின் ரசிகரான எம்.ஏ.பேபி கால்பந்து போட்டிகளை இரவு நீண்டநேரம் விழித்திருந்து பார்க்கும் வழக்கம் கொண்டவராம். எம்.ஏ.பேபி இரண்டுமுறை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்துள்ளார். கொல்லம் மாவட்டம் குண்டற தொகுதியில் இருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கேரள கல்வித்துறை அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டவர்களுடன் நட்புபாராட்டியவர் எம்.ஏ.பேபி. சி.பி.எம் கட்சியை கேரளா கட்சியாக மட்டும் சுருக்காமல், தேசிய கட்சியாக நிலைநிறுத்தும் சவால் எம்.ஏ.பேபி முன்னால் உள்ளது.