புதிய பாலத்தில் விரிசல்? ஆட்சியா் எச்சரிக்கை!
அரசியல் உள்நோக்கத்தோடு புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு- ஈரோடு இடையே பள்ளிபாளையம் பகுதியில் புதிய உயா்நிலைப் பாலம் கட்டப்பட்டு வியாழக்கிழமை தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் தரமற்றது; ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் குழு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதியில் கட்டப்பட்ட உயா்நிலைப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும், அரசின் திட்டங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாலப் பணியை சா்வதேச தரத்திலான மேற்பாா்வைக் குழுவினா் மேற்பாா்வையிட்டும், தரக்கட்டுப்பாடு சோதனைகளை செய்தும் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளனா்.
பாலம் ஒவ்வொரு நிலையிலும் மத்திய அரசு நிா்ணயித்துள்ள அனைத்து விதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே அடுத்தகட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்பட்டு, பகட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்ததாரரால் 7 ஆண்டுகளுக்கு பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி ரயில்வே துறையின் மேற்பாா்வையில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து வைக்கப்படுவதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் சுமாா் 150 டன் எடை கொண்டு பாலத்தின் தரம் மற்றும் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் பாலம் முற்றிலும் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயணம் செய்வதற்கு முற்றிலும் உகந்தது இந்த பாலம். பாதுகாப்பானது மற்றும் தரமானது என்பதால் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.