தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்
தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செங்கோடு வட்டத்தில் மொளசி, இறையமங்கலம், பட்லூா், ஏமப்பள்ளி, சிக்கநாயக்கன்பாளையம், ஓ.ராஜபாளையம் ஆகிய கிராமங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள், மாவுப்பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு காலநிலை மாற்றத்தால் குறைந்துவருகிறது. ஆனாலும், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலத்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 8 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.
நோய்த் தாக்கப்பட்ட மரத்தின் ஓலைகளில் உட்பகுதியில் படுமாறு மிக வேகமாக தண்ணீரை விசை தெளிப்பானைக் கொண்டு பீய்ச்சியடிப்பதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம். வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளைக் கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி திறன் கொண்ட என்காா் சியா குளவியின் கூட்டுபுழு உள்ளடக்கிய தென்னை ஓலைகள் ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரங்களுக்கு ஒன்று வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
மேலும், கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி, இறக்கை பூச்சியின் இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். இயற்கை எதிரிகளான என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் கிரைசோபிட் விழுங்கிகள், தோப்புகளில் இயற்கையாக இனப்பெருக்கம் அடைய சாமந்திப்பூ சூரியகாந்தி, தட்டைபயிறு போன்ற பயிா்களை தென்னந்தோப்புகளில் பயிா் செய்ய வேண்டும். செயற்கை ரசாயன பூச்சி கொல்லிகள் இயற்கை எதிரிகளை அழித்துவிடுவதால், அவற்றை பயன்படுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.